வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



23/02/2016

வாங்கியதில்லை! 5 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி - ஜூ.வி. ஸ்கேன்!






நீதிமன்றங்களின் கண்டனங்கள், இடித்துரைப்புகள், அபராதங்கள், ஆஜராகச் சொல்லி அனுப்பப்படும் நோட்டீஸ்கள் என்பவை எல்லாம் எதிர்வாதி அவமானப்பட வேண்டிய விவகாரங்கள்; அவர்களுக்குப் பதற்றம் தரக்கூடிய நடவடிக்கைகள். இத்தகைய தலைக்குனிவுகளை தமிழகத்தின் முந்தைய ஆட்சியாளர்களைவிட, ஜெயலலிதா தலைமையிலான தற்போதைய அரசு அதிகமாகச் சந்தித்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் அ.தி.மு.க அரசு சந்தித்த அவமானங்கள் ஏராளம். அதைப் பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இன்றைய தேதியில், தமிழக அரசுக்கு எதிராக ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காகத் தனியே ஒரு கண்டனத்தையும் நீதிமன்றத்திடம் இருந்து தமிழக அரசு தலையில் குட்டாக வாங்கிக்கொண்டது. ஆனாலும்கூட, ‘நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை’ என்ற போக்குடனே தமிழக அரசு செயல்பட்டது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறையை, மற்றொரு தூணாகத் திகழும் அரசு நிர்வாகம் மதிக்காமல் செயல்பட்டது இந்த ஆட்சியில்தான்.

“அரசியல் சாசனத்துக்கு எதிரானது!”

கல்வியாளர்கள் உட்பட பலரின் போராட்டங்களுக்குப் பிறகு, முந்தைய தி.மு.க ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்த்தது. அந்த விவகாரம், உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அதில், 2011 ஜூலை 19-ம் தேதி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கொடுத்தது. அதில், “சமச்சீர் கல்வியின் தரம், நிறைவேற்றும் முறை பற்றி ஆய்வு செய்யத்தான் தமிழக அரசின் நிபுணர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைச் செய்யாமல், திட்டத்தை இந்த ஆண்டு நிறைவேற்றலாமா? அடுத்த ஆண்டு நிறைவேற்றலாமா என்று ஆராய்ச்சி நடத்த உத்தரவிடவில்லை. அதைக்கூட புரிந்துகொள்ளாமல், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறைவேற்ற முடியாது என்று தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கை கொடுக்கிறது. சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதை எதிர்த்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், ‘சட்டத் திருத்தம்’ என்ற பெயரில் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது கல்வி பெறும் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது” என்று விளாசித்தள்ளியது நீதிமன்றம்.



ஆறு மாத அவகாசமா?

தி.மு.க ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. அதை, குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பதில் சொல்ல வேண்டிய தமிழக அரசாங்கம் ஆறு மாத கால அவகாசம் கேட்டது. மூன்று முறை இழுத்தடித்தது. கொதித்துப்போன சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நூலகத்தை மாற்ற ஒரு நொடியில் முடிவெடுத்த உங்களுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசமா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், நூலகத்தை மாற்றவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

“சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவோம்!”

சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 2014, ஜூன் 28-ம் தேதி 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. 61 தொழிலாளர்கள் பலியாயினர். இது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், கட்டடம் இடிந்தது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் நடந்த விசாரணை கமிஷனின் அறிக்கையை வெளியிட உத்தரவிடவேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘ரெகுபதி விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய காலதாமதம் செய்தால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது வரும்’ என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

வாரிசு வேலையை வழங்குவதில் என்ன சிக்கல்?

வேலூரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. அவரது தந்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணியாற்றினார். பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார். கருணை அடிப்படையில் தனக்குப் பணி வழங்குமாறு ஜெயலெட்சுமி தமிழக அரசிடம் கோரினார். ஜெயலட்சுமிக்குத் திருமணமாகி விட்டதால், அவருக்கு வாரிசு வேலை வழங்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெயலட்சுமி வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், “வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்கவேண்டும் என்று மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் சொல்கிறது. பெற்றோரைப் பாதுகாக்கும் கடமையில், பாலின பாகுபாடு பார்க்கப்படவில்லை. ஆகவே, பெற்றோர் மூலம் கிடைக்கும் உரிமையிலும் பாலின பாகுபாடு பார்க்க முடியாது. எனவே, விஜயலட்சுமிக்கு வேலை வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.



சிறைக்குப் போனவருக்குப் பதவியா?”

கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று 2000-ல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அப்போது, தர்மபுரியில் ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற டி.கே.ராஜேந்திரன் சிறையில் இருந்து வெளிவந்த உடன், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு கூட்டுறவுச் சட்டத்தின்படி, ஜெயில் தண்டனை பெற்றவர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகக்கூட பதவி வகிக்க முடியாது. எனவே, அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மணிக்குமார், ‘சிறைத் தண்டனை பெற்றவர் எப்படி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டார்?’ என்று கண்டனம் தெரிவித்தார்.

கடுப்பான நீதிமன்றம்!

தமிழக அரசுத் துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதற்குப் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு ஆணையிட்டது. ஆனால், பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை.

இதில் கடுப்பான உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, 2 துறைகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அடுத்த முறை கண்டிப்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர்.

ஆனால், மூன்றாவது முறையும் உயர்கல்வித் துறை சார்பில் பதில்மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. இதைக்கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக உயர்கல்வித் துறைக்கு மீண்டும் ரூ.10,000 அபராதம் விதித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்!

விதிகளை மீறி டிஜிட்டல் பேனர் வைத்தது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் விதிகளை மீறி பேனர் வைப்பதற்கு எதிராக டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘விதிகளை மீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் தைரியம் இல்லை. அதனால்தான் அந்தத் தவறு தொடர்கிறது’’ என்று கண்டனம் தெரிவித்தது.’’

“தமிழக அரசு மெத்தனம்!”

சென்னையில் மாணவி சுருதி, பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யாமல் தாமதித்து வந்தது. கோபம் அடைந்த நீதிபதிகள், “பள்ளி வாகனப் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. இது முக்கிய விஷயமாக தமிழக அரசுக்குத் தெரியவில்லையா? என்று கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘மாற்றம் இந்தியா’ என்ற அமைப்பினர் இயக்குநர் நாராயணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்ய விதிக்கப்பட்ட தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை வைத்துள்ளவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது’ என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘அபராதத் தொகை அதிகமாக இருந்தால்தான், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களை பொதுமக்கள் செய்யமாட்டார்கள். எனவே, ரூ.5 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை அபராதத் தொகையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

நீதிமன்றங்களில் அ.தி.மு.க அரசு வாங்கிய குட்டுகளும், சவுக்கடிகளும் அடுத்த இதழிலிலும் தொடரும்.

- ஜோ.ஸ்டாலின்

‘‘சகாயம் விசாரித்தால், உங்களுக்கு ஏன் அச்சம்?’’

மதுரை மாவட்டத்தில் மலைகளை விழுங்கிய கிரானைட் மாஃபியாக்கள் பற்றி அரசிடம் புகார்கள் தரப்பட்டன. எதிலும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், மதுரைக்கு கலெக்டராக வந்த சகாயம், கிரானைட் மாஃபியாக்களின் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில், சகாயம் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். கிரானைட் விவகாரம் ஊற்றி மூடப்பட்டது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கிரானைட் கொள்ளையை விசாரிக்க சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் போனது. தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சகாயம் நியமனம் தொடர்பாக மறு சீராய்வு செய்ய வேண்டும் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர், தமிழக அரசை கடுமையாக கண்டித்தனர்.

‘‘சகாயம் விசாரிக்க உத்தரவிட்டால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை ஏன் போகிறீர்கள்? பிறகு, மீண்டும் எங்களிடமே வருகிறீர்கள். சகாயம் விசாரித்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு அச்சம் வருகிறது? நாங்கள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் இவ்வளவு நாள் ஏன் காலம் தாழ்த்தினீர்கள்? உங்கள் மனுவைத் தள்ளுபடி செய்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.



நீதிமன்றத்திடம் ஜெ. அரசு வாங்கிய சவுக்கடிகள்!
அளவில்லா அவமானங்கள்...5 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி - ஜூ.வி. ஸ்கேன் பகுதி 2


சென்னை உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு வாங்கிய பல குட்டுகள், சவுக்கடிகள் குறித்து கடந்த ஜூ.வி இதழில் பார்த்தோம். இந்த இதழிலும் அந்தப் பட்டியல் தொடர்கிறது.  
மருத்துவமனைகளில் கட்டமைப்புகள்!

இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் விதிகளின்படி, மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் தீயணைப்பு மற்றும் தீத்தடுப்புச் சாதனங்கள், சாய்தள பாதை போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஆர்.சி.குடவாலா மட்டும் பதில் மனுத் தாக்கல் செய்தார். மற்றவர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. சென்னையில் அடுக்கு மாடியில் செயல்படும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளைப் பட்டியலிடுவதுடன், அங்கு மனுதாரர் குறிப்பிட்டுள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும்; முறையான அனுமதி பெறாத ஆஸ்பத்திரிகளுக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ் அனுப்ப வேண்டும்; சென்னை தவிர பிற மாவட்டங்களில், இந்த விதிகளை அமல்படுத்துவது பற்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  ஆனால், அதில் எந்தப் பதில் மனுவையும் அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பில் ஆஜாரன அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி கால அவகாசம்  கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘எத்தனை முறை அவகாசம் வழங்குவது? ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கால அவகாசம் கேட்பது சரியானது அல்ல’ என்று அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், தமிழக சுகாதாரத் துறை செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்,  இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். 

மதுரைக்குக் கேட்டால் திருச்சியா? 

மதுரையில் உள்ள இளம் சிறார் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று வெளியான தகவலின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அதில், சமூக நலத் துறையைச் சேர்ந்த அதிகாரி தாக்கல்செய்த அறிக்கையில், ‘திருச்சியில் சிறார் காப்பகம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. அங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்பது உள்ளிட்ட விவரங்களைக் கூறியிருந்தார். 

இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் கடும்  கண்டனம் தெரிவித்தனர். ‘நாங்கள் மதுரை சிறார் காப்பகம் குறித்து விவரம் கேட்டால், சமூக நலத் துறை அதிகாரி திருச்சியில் கட்டப்படவுள்ள காப்பகத்தின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். இந்த ஹைகோர்ட் பிறப்பிக்கும் உத்தரவைக்கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தை மதிக்காத அதிகாரிகள்?

ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2004-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஆசிரியர்களுக்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2008-ம் ஆண்டு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2014-ம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது.

ஆனால், இதுவரை ஹைகோர்ட் உத்தரவின் அடிப்படையில் பண பலன்களைப் பள்ளி நிர்வாகம் வழங்காததால், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் சிறப்பு அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான பி.பிரியா மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை ஹைகோர்ட்டில் ஆசிரியர்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹைகோர்ட் உத்தரவை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து, இனிமேல் கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்று எச்சரித்தனர்.
மழலையர் பள்ளிகளுக்கு என்ன விதிமுறைகள்?

தமிழகத்தில் 760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விதிமுறைகளை உருவாக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘விதிமுறைகளை உருவாக்க மேலும் 6 வார கால அவகாசம்’ கேட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் அரசு உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபீதா நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். 

பார்வையற்றோர் சராசரி மனிதர் அல்ல...

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009-ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர் பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழக சமூக நலத் துறை கடந்த 1981-ம்ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, அரசுப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உள்ளது. எனவே, 2009-ம் ஆண்டு அறிவிப்பு சட்ட விரோதமாகும். எனவே விரிவுரையாளர் பணிக்கான இந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய்  கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் கோவி ராமலிங்கம் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்  மனுவில், ‘1 முதல்  5-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க வேண்டிய விரிவுரையாளர், உடலை அசைத்து முகபாவனையுடன் பாடம் நடத்த வேண்டும். மேலும், களப்பயிற்சிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் சராசரியான நபர்களால்தான் செய்ய முடியும் என்பதால், பார்வையற்றோர், காதுகேளாதவர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க முடியாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பார்வையற்றோர் சராசரி மனிதரே கிடையாது என்று அரசுத் தரப்பில் பதில் கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் இப்படியொரு பதில் மனுவை தாக்கல்செய்த பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.

 தன் உத்தரவை தானே அவமதிக்கலாமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோட்டூரைச் சேர்ந்த ஆர்.நரசிம்மன் தாக்கல் செய்துள்ள மனுவில், கோட்டூர், கேனல் பாங்க் சாலையில், பீலியம்மன் கோயில் உள்ளது. இதற்குச் சொந்தமாக 3 கிரவுண்டு நிலம் அதே சாலையில் உள்ளது. அந்த நிலத்தை, எஸ்.ரவி என்பவர் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டி வருகிறார். இந்தக் கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கும், திட்ட அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் கட்டி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் பொதுமக்கள் புகார் செய்தனர். ஆணையர் நடவடிக்கை எடுத்தும் கட்டுமானப் பணிகள் நிற்கவில்லை.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீலுக்கு, தலைமை நீதிபதி, ‘மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை, மாநகராட்சி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்குத் தொடரும் அளவுக்கு அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது கண்டனத்துக்குரியது. சென்னை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

டெல்லிக்குச் செல்லுங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் வி.பி.சீனிவாசன். இவர், சென்னை  ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலை விரிவாக்கம் செய்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட சாலைகளின்  இருபுறமும் இருந்த ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டினர். ஹைகோர்ட் உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்குப் பதில் 10 மரங்களை நடவேண்டும். இந்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் ஒரு மரங்களை  வெட்டினால், அதற்கு 10 புதிய மரங்களை நடவேண்டும் என்றும் 200 ஆண்டு பழைமை வாய்ந்த மரங்களை வேரோடு எடுத்து வேறு இடங்களில் நடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

அத்துடன், வேறு இடங்களில் நடப்பட்ட மரங்களின் புகைப்படங்கள் தமிழக அரசு சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் படத்தைப் பார்த்த நீதிபதிகள், அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் எடுத்து வேறு இடங்களில் நடவேண்டும். ஆனால், தமிழக அரசு ஜே.சி.பி வாகனத்தைப் பயன்படுத்தி, மரத்தை வெட்டிச் சாய்த்து, வேறு ஓர் இடத்தில் நட்டுள்ளனர். இதுவா தொழில்நுட்பம்? தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி சென்று, அங்குள்ள மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மரங்களை எப்படி வேறு இடங்களில் நட்டனர் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் படித்து வந்து, அந்த முறையை இங்கு பயன்படுத்துங்கள்’ என்று உத்தரவிட்டனர். 

காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா!  

“விசாரணைக்காக போலீஸ்  நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கண்மூடித் தனமாக தாக்கப்படுகின்றனர். அவ்வாறு தாக்கப்படுபவர்கள் சில நேரங்களில் இறக்கவும் செய்கின்றனர். எனவே, போலீஸ் நிலையத்தில் நடத்தப்படும் விசாரணைகளை பதிவு செய்ய 
(சி.சி.டி.வி) கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்” என்று சென்னையைச் சேர்ந்த வக்கீல் பிரகாஷ் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. ‘இறுதி வாய்ப்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அபராதமாக உள்துறைச் செயலரும், டி.ஜி.பி-யும் தலா ரூ.10,000-ஐ சமரச மையம் மற்றும் மாற்று முறைத் தீர்ப்பாயத்துக்கு இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த அளவுக்கு நீதிமன்ற நெருக்கடியை இதுவரை எந்த அரசும் சந்தித்தது இல்லை!

- ஜோ.ஸ்டாலின்

21 வயதுக்குக் கீழே மது!

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மட்டுமே மதுக்கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோர் இரண்டு ஆண்டுகளாக எந்தப் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘பதில் மனுத் தாக்கல் செய்யாத தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவுத் தொகை விதிக்கப்படுகிறது’ என்று தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. 

 

No comments:

Post a Comment


Labels