நீதி நிச்சயம் வெல்லும்: மு.க.ஸ்டாலின்
நீதி நிச்சயம் வெல்லும் என்ற தலைப்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டள்ள கருத்தில்,
உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்கத்தின் எதிர்காலத்தை நினைத்து சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமன விவகாரத்தில் தமிழக அரசு பேராவல் காட்டியிருக்கிறது என்பது தெரிய வருகிறது என்று உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம் செய்து பவானி சிங் நியமனம் சட்டவிரோதமானது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இப்படியொரு விமர்சனம் உச்சநீதிமன்றத்திடமிருந்து வரக் காரணமாக இருந்த அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் தமிழகத்திற்கும், தமிழக அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை பல்வேறு கட்டங்களில் குற்றவியல் நீதி பரிபாலன நடைமுறையை ஜெயலலிதாவும் அவரது அரசும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறார்கள். குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 313வது பிரிவின் படி நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார். 16 வருடங்களுக்குப் பிறகு "மேலும் புலன் விசாரணை செய்ய வேண்டும்" என்று ஒரு உத்தரவைப் போட்டு நீதி கிடைப்பதை தடுக்க முயன்றார். இந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் தான் என் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று கேட்டார்.
இந்த விசாரணை துவங்கியதிலிருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் நீதியை திசை திருப்ப ஜெயலலிதாவும், அவரது அரசும் மேற்கொண்ட முயற்சிகள் நம் மாநிலத்திற்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுத்து விட்டன.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் நீதித்துறை தான் ஜெயலலிதாவின் நியாயமற்ற பல கோரிக்கைகளை நிராகரித்தது. இந்த முறையும் உச்சநீதிமன்றம் தீர்க்கமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. குறிப்பாக "செல்லரிக்கும் ஊழல்" "இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றங்களின் கடுமை" போன்றவற்றால் "சாட்சிகளை, ஆதாரங்களையும் ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து, எடை போட்டுப் பார்த்து தீர்ப்பு வழங்குவதுதான் நீதிபதியின் கடமை" என்றும் வலியுறுத்தியிருக்கிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நீதி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment