பெரம்பலூரில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்து தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மத்தியஅரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும், தமிழக வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்து குமாரசாமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கண்டித்தும், அதிகாரியின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் பாரபட்சம் இன்றி கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசியதாவது:-
எதிர்க்கிறோம்
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு அம்பானி, அதானி போன்ற செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஏழை, எளியவர்களின் நிலத்தை அபகரித்து தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில்அதிபர்களுக்கு பா.ஜ.க. அரசு வழங்குகிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பெரம்பலூர் அருகே டயர்தொழிற்சாலை அமைவதற்கு உரிய விலையை கொடுத்தோம். ஆளும் பா.ஜ.க. அரசு விளை நிலங்களை கையகப்படுத்தி பள்ளிக்கு கொடுத்தால் பரவாயில்லை. பெரும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே கொடுத்துவருகிறது. இதைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
2005-ம் ஆண்டு அ.தி.மு.க. வினர் நில கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். என்மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் மீது வாய்தா வாங்காமல், வழக்கு தடைபடாமல் விரைந்து நடக்கவேண்டும் என்ற நோக்குடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறேன். என்மீதான வழக்கை எதிர்கொண்டு நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். தமிழக வேளாண்மை பொறியியல் துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டதற்கு முழு முதல்காரணமாக இருந்துள்ள முன்னாள் அமைச்சரை கைது செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வல்லபன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, நல்லதம்பி, மதியழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன, நகர செயலாளர் முத்துரத்னாபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment