வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



09/09/2014


இதைவிட பெரிய வெட்கக்கேடு ஒன்று 
ஆளுங்கட்சிக்கு இருக்க முடியுமா? : கலைஞர் 


திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம்:

’’நெல்லை மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் தனது வேட்பு மனுவினை வாபஸ் பெற்றதால், அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகி யிருக்கிறாராம். அங்கே மட்டும்தான் இந்த நிலையா? நான்கு நகராட்சித் தலைவர் பதவி யையும் அ.தி.மு.க. கைப்பற்றியதாம். “தினத்தந்தி” யின் இன்றைய எட்டு கால செய்தியே இதுதான். ஆனால் இந்த வெற்றிகளை மக்களிடம் வாக்கு களைப் பெற்றா பெற்றார்கள்? ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க. இந்த உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தலை முறையாக நடத்தாது என்பதை உணர்ந்துதான் தி.மு.க. மட்டுமல்ல;இங்கேயுள்ள பெரும்பான்மையா ன எதிர்க்கட்சிகள் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணித்து முன்பே அறிக்கைகளை விடுத்தன. ஆனால் பா..ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தன. ஆனால் அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆளுங்கட்சி என்ன பாடுபடுத்துகிறது? 

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல்கள் இத்தனை தொகுதிகளுக்கு நடைபெறுகிறது என்றால், எதிர்க்கட்சிகள் எல்லாம் தங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உரிய அவகாசம் கொடுத்து, தேர்தல் அறிவிப்பு தேர்தல் ஆணையத் தால் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட தா? செப்டம்பர் 18ஆம் தேதி அன்று உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்றுதான் திடீரென அறிவித்தது. 

இதிலே வேடிக்கை என்னவென்றால், இதே உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு ஏற்கனவே ஒரு முறை அதாவது 6-8-2014 அன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு - அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே, அதே தேர்தல் ஆணையத்தால், தேர்தல் பற்றிய அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற கோமாளித் தனமும் நடைபெற்றது. 

ஏற்கனவே ஒரு முறை தேர்தல் பற்றி அறிவிப்பு கொடுத்து, அந்த அறிவிப்பை ரத்து செய்த பிறகு, இருபது நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை தேர்தல் பற்றிய அறிவிப்பினை தேர்தல் ஆணையம் செய்த போது, ஏற்கனவே விடுத்த அறிவிப்பில் கூறியிருந்த தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 18 என்பதை மாற்றினார்களா என்றால் கிடையாது. 6-8-2014 அன்று எந்தத் தேதியில் தேர்தல் நடைபெறுமென்று அறிவித்து, பிறகு  அதே நாளில் ரத்து செய்தார்களோ, அதே தேதியில் தேர்தல் நடைபெறும் என்றுதான், 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் ஆணையம் கொடுத்த அறிவிப்பிலும் தெரிவித்தார்கள். 

தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததற்கு முதல் நாள் தான் அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரோடு ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தக் கடலூர் நகராட்சிக்கும் இடைத் தேர்தல் என்று அவர் ராஜினாமா செய்த மறுநாளே அறிவிக்கப்பட்டது. தமிழக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இது போல, பதவி காலியான மறுநாளில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதே இல்லை என்று “தினமலர்” நாளேடே குறிப்பிட்டிருந்தது. 

அ.தி.மு.க. வேட்பாளர்களையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு மற்ற எதிர்க் கட்சிகளுக்கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டது. இவ்வளவிற்கும் பிறகு பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட முன் வந்திருக்கும்போது, இந்தத் தேர்தல்களையாவது ஜனநாயக அடிப்படையில் நடத்திட ஆளுங்கட்சியினர் முன்வந்தார்களா? உள்ளாட்சி இடைத் தேர்தல்களில் எப்படியெல்லாம் அ.தி.மு.க. நடந்து கொண்டது என்பதற்கு ஒரு சில உதாரணங்களைக் கூறட்டுமா? 

புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க. சார்பிலும், கம்யூனிஸ்ட்கள் சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, அவர்களை உள்ளேயே விடாமல் அ.தி.மு.க. வினர் தடுத்து, அதனை எதிர்த்து அந்தக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடைசி வரை அங்கே வேட்பு மனு தாக்கல் செய்யவே விடாமல் செய்து விட்டு, ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டார். 

நெல்லை மேயர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர், திடீரென்று வாபஸ் பெற்றுக் கொண்டாராம், அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாராம்! ஆனால் அங்கே நடந்தது என்ன தெரியுமா? நெல்லையில் பா.ஜ.க. உட்பட பத்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந் தார்கள். இதில் பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் தவிர, மற்ற அனைவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து விட்டார்கள். மனுவை வாபஸ் பெற கடைசி நாளான நேற்றையதினம் பா.ஜ.க. வேட்பாளர் தனது மனுவினை வாபஸ் பெற்றிருக்கிறார். ஆனால் அதுபற்றி பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அளித்த பேட்டியில், “பல இடங்களில் பா.ஜ. வேட்பாளர்கள் போட்டியிடக் கூடாது என்று மிரட்டப்பட்டும், தாக்குதலுக்கு உள்ளாகியும் வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தால் மனுக்களை வாங்க மறுக்கின்றனர். 

இந்நிலையில் திருநெல்வேலி பா.ஜ. மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் கடந்த 3 நாட்களாக மிரட்டப்பட்டு வந்தார். இது தொடர்பாக கட்சிக்கும் தெரிவித்து வந்தார். அவரை மிரட்டி கையெழுத்து வாங்கி மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். மேலும் அவரை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வ தாகவும்கூறியுள்ளனர். 

எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற மோசமான நிலை தற்போது தமிழகத்தில்  உருவாகியுள்ளது. மனு தாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில், பா.ஜ.க. வினரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீஸ் போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர் மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்? வேட்பாளர்களை மிரட்டுவது, தாக்குவது, மனுக்களை வாபஸ் பெற வைப்பது என்று ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின் றனர். 

எதிர்க்கட்சிகள் வெற்றி பெறக் கூடாது, போட்டியிடாமலே வெற்றி பெற வேண்டும் என்றே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்” என்றெல்லாம் தெரிவித் திருக்கிறார். 

உள்ளாட்சி இடைத் தேர்தலில் முறைகேடு நடப்பதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக் கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள். 

நெல்லையில் நடைபெற்ற ஒரு சம்பவம் மாத்திரமல்ல; திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு தவறாகத் தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர், தோழர் ஜி. ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி யிருக்கிறார். இதுபற்றி விசாரித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையச் செயலாளர், ஜோதி நிர்மலா வெளியிட்ட அறிவிப்பில், இந்தப் புகார் குறித்து மாவட்டக் கலெக்டர் விசாரித்து அனுப்பிய அறிக்கை விரிவாகப் பரிசீலிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு 5ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்ட போது, தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தேர்தல் விதிகளைச்ச ரியாக கடைப்பிடிக்கவில்லை. எனவே அவர்களை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யவும், விசாரணை நடத்தவும் ஆணை யிட்டிருப்பதாகத் தெரிவித்ததோடு, இந்தத் தேர்தலை ரத்து செய்தும் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கக் கூடக் காரணம், கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த இடத்தில் ஒட்டப்பட்ட வேட்பாளர் பட்டியலை புகைப்படமாக எடுத்துக் காட்டிட, அதனை மறுக்க முடியாமல்தான் தீவிர நடவடிக்கை அங்கே எடுக்கப்பட்டதாம்! 

தாம்பரம் நகராட்சியில் 7வது வார்டு, 33வது வார்டு இரண்டுக்கும் இடைத் தேர்தல் நடைபெற விருந்தது. அந்த இடங்களில் பா.ஜ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அங்கே வேட்பு மனு தாக்கல் செய்த அ.தி.மு.க.வினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்க ப்பட்ட தாக அறிவித்து விட்டனர். பல்லாவரம் நகராட்சியில் 2வது வார்டில் பாஜ.க. உட்பட ஆறு பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந் தனர். 

ஆளுங்கட்சி வேட்பாளரைத் தவிர மற்றவர் களின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறச் செய்யப்பட்டு, அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆவடி நகராட்சியில் 33வது வார்டில் பா.ஜ.க. உட்பட 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 2 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 8-9-2014 அன்று பா.ஜ.க. உட்பட எஞ்சிய எட்டு பேரும் வாபஸ் பெற்றதாகக் கூறி, ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இங்கே போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரும், மாற்று வேட்பாளரும் அ.தி.மு.க.வில் சேர்ந்ததாகக் கூறப்பட்டது. இதனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டமும், மறியலும் நடைபெற்று, காவல் துறையினர் அவர்களை கைது செய்து இரவில் விடுதலை செய்திருக்கிறார்கள். 

ஆலந்தூரில் 166வது வார்டுக்கான இடைத் தேர்தல். பா.ஜ.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பா.ஜ.க. வேட்பாளரை நேற்று காலை முதலே காணவில்லையாம். செல்போனில் தொடர்பு கொண்டும் பதில் வராத தால், சந்தேகம் அடைந்த அந்தக் கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர், ஆலந்தூர் மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு வந்து, தங்கள் கட்சி வேட்பாளர் வருகிறாரா என்று கவனத்தோடு காத்திருந்தார் களாம். ஆனால் 1.35 மணிக்கு பா.ஜ.க. வேட்பாளர் தனது வேட்பு மனுவினை திரும்பப் பெற்று விட்டதாக தேர்தல் அலுவலர் கூற, பா.ஜ.க.வினர் அவரிடம் தாங்கள் அலுவலக வாசலில் நிற்கும் போது எப்படி அங்கே வந்து மனுவை வாபஸ் பெற்றிருக்க முடியும் என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். அதற்கு தேர்தல் அதிகாரி அவர் எப்படி உள்ளே வந்தார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டாராம்.

 பா.ஜ.க. வேட்பாளருக்கு பெருந்தொகை கொடுத்து அ.தி.மு.க.வில் சேர்ப்பதாகக் கூறி அவரது வேட்பு மனுவினை வாபஸ் பெறச் செய்யப்பட்டதாம். மதுரை மாநகராட்சி 85வது வார்டில் இடைத் தேர்தல். அங்கே பா.ஜ.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்தையும் தீவிரமாக செய்து வந்தார். ஆனால் பா.ஜ.க. வேட்பாளரும், பா.ஜ.க. மாற்று வேட்பாளரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்று விட்டதாகக் கூறி, அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்று விட்டதாக தேர்தல் நடத்திய அதிகாரி அறிவித்தார். ஆனால் பா.ஜ.க. வேட்பாளரோ, மாற்று வேட் பாளரோ தங்கள் வேட்பு மனுக்களை கையெழுத் திட்டு வாபஸ் பெற்றார்களா என்றால் கிடையவே கிடையாது. இவர்களது வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு, யாரோ இருவர் மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவ தாகக் கூறியதன் பேரில் வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டன என்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். உண்மையில் பா.ஜ.க. வேட்பாளரின் மனுவை முன்மொழிந்தவர் வேட்பாளருடன் அதே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்திருக் கிறார். அவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு யாரோ இருவர் கையெழுத்திட்டதை நம்பி அதிகாரி அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்த நாடகமும் நடந்துள்ளது. 

ராமனாதபுரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர், அ.தி.மு.க.வினர் தன்னை மிரட்டுவதாக கலெக்டர் மற்றும் எஸ்.பி. இடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், அ.தி.மு.க.வினர் அவரிடம் வந்து, “உன்னுடைய கையெழுத்தை நாங்களே போட்டு, போட்டியிலிருந்து நீ விலகிக் கொள்வதாக எழுதிக் கொடுத்து விட்டோம். அதனால் நீ போட்டியிட முடியாது” என்று கூறியதாகத் தெரிவித்திருக் கிறாராம். 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் ஊராட்சிக்குப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரபாகரனை காணவில்லை என்று அவர்களுடைய வீட்டாரே கூறியிருக்கிறார்களாம். 

இப்படியெல்லாம் தில்லுமுல்லுகளும், அக்கிர மங்களும், அராஜகங்களும் நடைபெறும்  என்று எதிர்பார்த்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த உள்ளாட்சி இடைத் தேர்தல்களில் பங்கு பெறுவதில்லை என்று புறக்கணித்தது. தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும் இந்தத் தேர்தலில் பங்கேற்காமல் தவிர்த்தன. ஆனால் போட்டியிடும் ஒன்றிரண்டு கட்சிகளின் வேட்பாளர்க ளையும் அ.தி.மு.க.வினர் மிரட்டி ஒடுக்கி பயமுறுத்தி வாபஸ் பெறச் செய்திருக்கி றார்கள் என்றால் இதைவிட பெரிய வெட்கக்கேடு ஒன்று ஆளுங்கட்சிக்கு இருக்க முடியுமா? ’’

No comments:

Post a Comment


Labels