சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு: சென்னையில் கலைஞர் தலைமையில் கண்டன கூட்டம்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (22-7-2014) மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட தலைநகரங்களில் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகச் சட்டப் பேரவையில் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக மின் தட்டுப்பாடு, குடிநீர் பற்றாக்குறை, விவசாயிகள் படும் துயர், மற்றும் பல்வேறு மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து கழக உறுப்பினர்கள் ஒத்தி வைப்புத் தீர்மானம், கவன ஈர்ப்புத் தீர்மானம், சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஆகியவற்றை விவாதிப்பதற்கு அனுமதி கோரிய நேரத்தில் அவற்றைப் புறக்கணித்தும், குறிப்பாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மக்களின் குறைபாடுகளைப் பற்றிப் பேசுவதற்கே வாய்ப்பு தராமல், எதிர்க் கட்சித் தலைவர்களை, குறிப்பாக நம்முடைய கழகத் தலைவர் கலைஞர் அவர்களை அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சனம் செய்வதையே தங்களின் பணியாகக் கொண்டுள்ளனர். அவர்களின் பேச்சுக்கு முதலமைச்சரோ, பேரவைத் தலைவரோ தடை செய்யாமல் அவர்களை அவ்வாறு பேச ஊக்குவிப்பதோடு, கழக உறுப்பினர்களை அவர்களுக்குப் பதில் கூற முனைந்தால் அதற்கு வாய்ப்பு தரப்படுவதும் இல்லை. சபை நடைபெற்ற ஒன்பது நாட்களில் கழக உறுப்பினர்களை மூன்று முறை வெளியேற்றியிருக்கிறார்கள் என்பதிலிருந்து எந்த அளவுக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தற்போது மூன்று முறை வெளியேற்றிய காரணத்தால் இந்தக் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களில் பேரவை விவாதங்களில் கலந்து கொள்ளக் கூடாதென பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இத்தகைய போக்கினைக் கண்டிக்கின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக “தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் கண்டன கூட்டங்களை மாவட்டத் தலைநகரங்களிலும், மற்றும் முக்கிய நகரங்களிலும் நடத்துவதென்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிப்பதோடு, சென்னையில் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் ஜுலை 31ஆம் தேதியன்றும், மற்ற நகரங்களில் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளிலும் இந்தக் கண்டனக் கூட்டங்களை நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment