வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



06/06/2014

கலைஞர் 91 – போற்றலும், தூற்றலும்.

10274047_779207362091471_946245191804996542_n
இந்தக் கட்டுரையை ஒரு நாள் பின்னதாகவே எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன், முன்னதாக நமது சமூகத்தின் மனநிலையை, நமது இளைஞர்களின் உண்மையான அரசியல் புரிந்துணர்வை அறிவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. சில அதிமுக நண்பர்கள் அந்த மனிதரை எல்லாப் பகையுணர்வையும் தாண்டி வாழ்த்தி இருந்தார்கள், சில வயதில் மூத்த பார்ப்பன நண்பர்கள் என்ன இருந்தாலும் அவரது இருப்பையும், உழைப்பையும் நிராகரிக்க முடியாது தானே என்று காழ்ப்பை மறந்து போற்றி இருந்தார்கள், வழக்கம் போலவே உயிரினும் மேலான உடன்பிறப்புகள் தங்கள் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருந்தார்கள்.
சித்தாந்த வழியிலான அவரது எதிரிகள் கூட அவரது இருப்பையும், வயதையும் எள்ளி நகையாடி மகிழும் வேலையைச் செய்யவில்லை, ஆனால், குறிப்பிட்ட இருதரப்பு மட்டும் அவரது இருப்பையும், வயதையும், அவரது மரணம் குறித்த தங்கள் அடங்காத ஆசைகளையும் பேசித்தீர்த்துத் தங்கள் மன அரிப்பைப் போக்கிக் கொண்டது. அதில் முன்னது தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் குழாயடி அரசியல் செய்யும் ஒரு புத்தம் புதிய இணைய அரசியல் தலைமுறை, இன்னொன்று அடங்காத பார்ப்பனத் திமிரும், சாதிய வெறியும் கொண்ட பூணூல் தலைமுறை.
"அவரது படத்துக்கு மாலையணிவிக்க வேண்டும்", மாதிரியான நேரடி வன்மம் நிரம்பிய தூற்றல்கள், "காலம் தான் எத்தனை கொடியது அவரை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது"  மாதிரியான இலக்கிய வாசனை நிரம்பிய வன்மம், ஞோ, ஞா, கோ, கொம், %$#^$^%#%&&%%$&&% மாதிரியான ஏக வசன வன்மம் என்று பலதரப்பு அடிப்படை நாகரீகமற்ற வன்மங்களை அவரவர் பிறவித் தகுதிகளுக்கு ஏற்ப அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருந்த பொழுதில் அவர்கள் ஒரு உண்மையை மறந்து விட்டிருந்தார்கள். தூற்றளுக்கான சொற்களை இவர்கள் தேடித் தட்டச்சு செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் பல லட்சக்கணக்கான தமிழ்ச் சமூகத்து இளைஞர்களும், மூத்தவர்களும் வயது வேறுபாடுகள் இல்லாமல் அந்த 91 வயது நிரம்பிய முத்துவேலர் கருணாநிதியை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள், ஒவ்வொருவரின் வாழ்த்துக்குப் பின்னரும் வெவ்வேறு காரணங்கள் இருந்தன.
ஒருவன் தனது முதல் தலைமுறையைக் கோவணத்தில் இருந்து வேட்டிக்கு மாறியதற்காக அவரை வாழ்த்திக் கொண்டிருந்தான், ஒருவன் தனது தலைமுறை முதன்முதலாகக் கல்லூரிக்குப் போக உதவிய ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளைச் சட்ட வடிவமாக்கியதற்காக அவரை வாழ்த்திக் கொண்டிருந்தான். ஒருவன் மதராஸ் என்கிற புரியாத பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றியதற்காகவும், தமிழையும், ஆங்கிலத்தையும் மட்டுமே மாநில ஆட்சி மொழியாக மாற்றிச் சட்டம் கொண்டு வைத்ததற்காக ஒருவன், கையால் இழுக்கப்பட்ட ரிக்சா வண்டிக் கொடுமையில் இருந்து தனது தந்தையைக் காப்பாற்றியதற்காக ஒருவன், பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வியைப் பெற்றதற்காக ஒருவன்.
imagesCAEPAOA6
மண் வீடுகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மழைக்கு ஒழுகாத கான்க்ரீட் வீடுகளுக்குக் குடியமர்த்தியதற்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அமைச்சகத்தை முதன் முதலில் உருவாக்கியதற்காக, பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு விழுக்காட்டை 25 இல் இருந்து 28 ஆக மாற்றியதற்காக ஒருவன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 16 இல் இருந்து பதினெட்டாக உய்ரத்தியதற்காக ஒருவன், தமிழகத்தின் முதல் விவசாயப் பல்கலைக் கழகத்தை உண்டாக்கி அதில் கல்வியை வழங்கியதற்காக ஒருவன், சேலம் இரும்பு உருக்காலையை உருவாக்கி அதில் வேலை வாய்ப்புக் கொடுத்ததற்காக இன்னொருவன், இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக, ஏழைக் குழந்தைகளுக்கான அரசுக் கல்வித் திட்டம், ஏழை இளம்பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், விதவைகளுக்கான திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவித் திட்டம், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் உள்ளடக்கிய ஐந்து புதிய பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதப் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சமச்சீர் கல்வி என்று  இன்னும் பக்கங்கள் தீராத மக்களுக்கான திட்டங்களை வழங்கியதற்காக பல லட்சம் தமிழ்ச் சமூக மக்கள் அவரை நேரிலும், அவரவர் வாழிடங்களிலும், ஊடகங்களிலும், சமூக இணைய தளங்களிலும் வாழ்த்தினார்கள்.
அவரைத் தெலுங்கர் என்றும் வந்தேறி என்றும் குற்றம் சாட்டுகிற அறிவுக் கொழுந்துகள், பத்துத் திருக்குறளை ஒரே நேரத்தில் சொல்லத் தெரியாத மொழி குறித்த அடிப்படை அறிவில்லாத அடி மடையர்கள், தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு அவர் உரை எழுதவில்லை மூடர்களே, திருக்குறளுக்குத் தான் அவர் உரை எழுதினார், பரிமேழகர் உரைக்கும், பரிதிமாற்க் கலைஞர் உரைக்கும் அடுத்து இலக்கிய வரலாற்றில் கலைஞர் தான் திருக்குறளுக்கு உரை எழுதிய மூத்த தமிழறிஞர். புறநானூறு, அகநானூறு என்றெல்லாம் வாய்க்குள் நுழையாத சிக்கலான பழந்தமிழ்ப் பாடல்களுக்கு சங்கத்தமிழில் மொழி சமைத்து எளிய தமிழ் மக்களின் கைகளில் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்த மாபெரும் அறிஞன் அந்த மனிதர், இன்னும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத இணையக் கும்மிப் பண்டாரங்கள் சில அவரது இருப்பைக் குறித்துக் கிண்டல் செய்வது  தான் நகைச்சுவையின் உச்சம்.
ஒரு மனிதரைக் குறித்தும் அவரது அரசியல் செயல்பாடுகள் அல்லது சமூக செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வதற்கு முன்னாள் அதற்கான குறைந்த பட்சத் தகுதி ஏதாவது நமக்கு இருக்கிறதா என்கிற சுயவிமர்சனத்தை இந்த இணையக் குஞ்சுகள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி இருக்கலாம், அவர் இன்னும் தீவிரமாக தனது ஆதரவை விலக்கிக் கொண்டு நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத்தில் மடிந்து போன எமது பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்குப் போராடி இருக்கலாம் போன்ற உங்கள் விமர்சனங்களை நான் இன்னும் தீவிரமாகவே வைத்திருக்கிறேன், ஆனால், மக்களும், அவர்தம் எண்ணங்களுமே அரசு என்பதை மறந்து விடாதீர்கள், நீங்கள் என்ன செய்தீர்களோ அதையே அரசுகள் செய்தன, நீங்கள் என்ன செய்ய மறந்தீர்களோ அதையே அரசுகளும் செய்ய மறந்தன.  நீங்கள் வீதிக்கு வருவதற்கும், போராடுவதற்கும் தயாராக இல்லை, நீங்கள் உங்கள் தொலைக்காட்சித் தொடர்களையும், திரைப்பட அரங்குகளையும் விட்டு வெளியேறவில்லை, நீங்கள் மொழி குறித்தும், இனம் குறித்தும் ஏதுமறியாத அப்பாவிகளைப் போல வாளாயிருந்தீர்கள், அரசுகளும் அப்படியே இருந்தன.
அரசியல், விமர்சனங்களைத் தாண்டி அவரது சமூகத்துக்கான உழைப்பு இன்னும் தீர்ந்த பாடில்லை, அவரிடம் பணமும், புகழும், பெருமைகளும் இன்னும் வாழ்க்கையின் எல்லாத் தேவைகளும், தேடல்களும் நிரம்பிக் கிடக்கின்றன, அவர் உலகின் உல்லாச நகரங்களுக்குச் சென்று இயற்கையை ரசித்தபடி ஓய்வெடுக்கலாம், அவர் வாழ்வின் இன்பங்களைத் துய்த்துமகிழலாம், ஆனாலும், இணையப் பிணந்தின்னிகளே, அவர் இந்த மண்ணை விட்டு எங்கும் சென்றதில்லை, இந்தத் தமிழ் மக்களின் வாழ்க்கையும், வரலாறும் சிதறிக் கிடக்கிற ஏதாவது ஒரு வீதியில் இன்னமும் அவர் வாழ்க்கை, இலக்கியம், சமூகம், அரசியல், இளைஞர்கள், பண்பாடு, கலாச்சாரம் என்று ஏதோ ஒன்றைப் புலம்பியபடி நிலைத்திருக்கிறார். வெற்றி, தோல்வி, அதிகாரம், பதவி, பாதுகாப்பு என்று எல்லாக் காலத்திலும் அவர் இந்த மொழியையும், இந்த மக்களையும், இந்த மாநிலத்தையும் குறித்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார், ஒரு நிலைத்தகவலையோ, ஒரு பின்னூட்டத்தையோ கூடச் சொற்பிழைகளின்றி எழுதத் தெரியாத குருட்டுக் க….னாக்களும், மு…..னாக்களும் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக குறைந்தது நான்கு பக்கங்களில் தூய தமிழில் கடித இலக்கியம் எழுதிக் கொண்டிருக்கிற ஒரு மூத்த மனிதரைச் சாகச் சொல்கின்றன.
untitled
இன்னும் ஊழலற்ற, இன்னும் தீவிரமான இனத்துக்கான அரசியலை அவர் செய்திருக்கலாம், இவர் செய்திருக்கலாம், கருவறுப்போம், மயிரைப் பிடுங்கிக் கயிறாய்த் திரிப்போம் என்றெல்லாம் இணையத்தில் வக்கனையாய் வாய் வலிக்கப் பேசுகிற எழுதுகிற களவாணிகள் யாரும் அவர் இதே மாநிலத்தின் மக்களால் பல முறை தேர்வு செய்யப்பட முதல்வர் என்பதையும், இந்திய அரசியலின் வரலாற்றில் அளப்பரிய பங்காற்றிய வயதில் மூத்த ஒரு தலைவர் என்பதையும், எந்த ஆணியும் பிடுங்காத இந்த வாய்ச்சொல்  வீரர்களின் செம்மொழியான தமிழுக்கு பல மகுடங்களைச் சூட்டிய தமிழின் மூத்த எழுத்தாளர் என்பதையும் வசதியாக மறந்து விடுகிறார்கள், அவர்களைப் பொருத்தவரை வரலாறு தெரியாமல், வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் மனமில்லாமல் கருணாநிதியை ஏக வசனத்தில் தூற்றி அவரது பிறந்த நாளில் அவரது மரணத்தை எதிர் நோக்குவதாகச் சொல்வது தான் புரட்சி.
அவரது உழைப்புக்காகவும், அவரது அளப்பரிய அரசியல் பங்களிப்புக்காகவும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சட்ட வழியாக அவர் செய்து காட்டிய சமூக நீதிக்காகவும், பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும், தமிழ் மொழியின் மேன்மைக்கான அவரது இலக்கியப் பங்களிப்புக்காகவும் அவரை வரலாறு முழுக்க வாழ்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், தூற்றுபவனின் பிள்ளைகளும் நாளை பள்ளியில் அமர்ந்து இதே கருணாநிதியைத்தான் முன்னாள் முதல்வர் என்று வாசிக்க வேண்டியிருக்கும்.
காலம் கடந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எம்மினத்தின் மூத்தவரே, உங்கள் தமிழ் தேமதுரமாக எங்களுக்கும், காய்ச்சிய ஈயமாக உங்களைத் தூற்றும் மொழியறியாத மூடர்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கட்டும்.

*************

NANDRI ARIVALAGAN

No comments:

Post a Comment


Labels