வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



05/01/2014

திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே? (2)

கடந்த ஞாயிறு அன்று கழகத்தின் மாநில மாநாடுகள் எவ்வெப்போது நடைபெற்றன என்பது குறித்தும், அந்த நாடுகள் எங்கே, யார் தலைமையில் நடைபெற்றன என்பது குறித்தும், திருச்சியில் நடைபெறவிருக்கும் பத்தாவது மாநில மாநாடு பற்றியும் எழுதத் தொடங்கியதைப் படித்திருப்பாய்! திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் கழகம் தேர்தல்களில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று மாநாட்டில் வாக்குப் பெட்டிகள் வைத்து, மாநாட்டிற்கு வந்திருந்தோரின் கருத்து அறிந்து ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப் பட்ட கழக வரலாற்று நிகழ்வு பற்றியும், தற்போது அதே திருச்சியில் நடைபெறவிருக்கின்ற பத்தாவது மாநில மாநாடு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு நடைபெறவிருப்பது பற்றியும் விளக்கியிருந்தேன்.

1949ஆம் ஆண்டு பிறந்த கழகம் தன்னுடைய முதல் மாநில மாநாட்டை 1951ஆம் ஆண்டு டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடத்தியது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா; அதற்கு முன்பு 1951 நவம்பர் 17ஆம் தேதியன்று காலையில் மதுரையில் பொதுக்குழு உறுப்பினர் களின் கூட்டம் நடைபெற்றது. தற்போது சில கட்சிகளின் செயற்குழுவும், பொதுக்குழுவும் மாலை 3 மணிக்குத் தொடங்கி 6 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறதல்லவா? அப்போது முதல்நாள் காலையில் கூடிய தி.மு.கழகத்தின் பொதுக்குழு மறுநாள் காலையிலேதான் முடிவுற்றது. இடைவேளை என்பதே இல்லாமல் பலரும் கருத்துரை வழங்கிட வாய்ப்பளிக்கப்பட்டுத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. சென்னையில் டிசம்பரில் நடைபெறவிருந்த முதல் மாநில மாநாட்டின் திறப்பாளராக தோழர் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் பெயரை குடந்தை கே.கே.நீலமேகம் முன்மொழிந்தார். நாவலர் நெடுஞ்செழியன் பெயரை நான் முன் மொழிந்தேன். அதற்கிடையே அண்ணா அவர்கள் மாநாட்டுத் திறப்பாளராக கே.கே.நீலமேகம் அவர்களே இருக்கட்டும் என்று முடிவினை அறிவித்தார். மாநாட்டுத் தலைவராக, பேரறிஞர் அண்ணா அவர்களும், திறப்பாளராக பெரியவர் கே.கே.நீலமேகம் அவர்களும், கண்காட்சித் திறப்பாளராக அண்ணன் சி.பி. சிற்றரசு அவர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

முதல் மாநில மாநாடு பற்றி எத்தனை எத்தனை நினைவுகள்? சென்னையில் மாநில மாநாட்டிற் கான வேலைகள் இரவும் பகலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அண்ணாவும், நாங்களும் இரவு பகலாக மாநாட்டுப் பந்தலிலேயே அமர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தோம். ஒருநாள் இரவு 11 மணி. பந்தலில் பரப்புவதற்காகக் கொட்டப்பட்டிருந்த மணல் மேட்டில் அண்ணா அவர்களும் நானும், வேறு சில நண்பர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். மாநில மாநாட் டிற்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற குமரி மாவட்ட மாநாட்டில், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களை உள்ளூர் நண்பர்கள் அனுமதிக்காமல் தடுத்துவிட்டதால், அவர் மனம் புண் அடைந்திருப் பதை அண்ணாவிடம் தெரிவித்து, மாநில மாநாட்டிற்கு கலைவாணரையும் அழைக்க வேண்டுமென்று கூறினேன். உடனே அண்ணா, "நீ இப்போதே சென்று அவரை அழைத்துவா" என்றார். இப்போது போல் அப்போது "செல்போன்" எல்லாம் கிடையாது. நான் காரை எடுத்துக் கொண்டு, கலைவாணர் இல்லத்திற்கே சென்று, அண்ணா அழைப்பதாகச் சொன்னவுடன், கலைவாணர் அருவி போல கண்களில் நீரைப் பொழிந்து கொண்டு காரிலே ஏறி உட்கார்ந்தார். மாநாட்டுப் பந்தலுக்கருகே அண்ணா அமர்ந்திருந்த மணல் மேட்டிற்கருகே கலைவாணர் வந்து அண்ணாவைக் கட்டிப்பிடித்துக் கொண்ட காட்சியும், அண்ணா தழுதழுத்த குரலில் அவரை வரவேற்றக் காட்சியும் மறக்க முடியாத காட்சி அல்லவா? "என்ன அண்ணா? இந்த மாநாட்டில் நான் கிடையாதா?" என்று கலைவாணர் கேட்டதும், "மாநாடே உங்கள் வில்லுப்பாட்டோடுதானே துவங்குகிறது" என்று அண்ணா பதில் கூறினார்.

1951ஆம் ஆண்டு மதுரைப் பொதுக் குழுவில் முதல் மாநில மாநாட்டின் திறப்பாளரை முன்மொழிந்த நான்; தற்போது பிப்ரவரியில் திருச்சியில் நடைபெற வுள்ள பத்தாவது மாநில மாநாட்டிற்கு, தலைமை யேற்று கொடியேற்றுபவனாகவும், நம்முடைய பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் அவர்கள் திறப்பாளராகவும், கழகப் பொருளாளர் தளபதி தம்பி மு.க.ஸ்டாலின் மாநாட்டின் பொருளாளராகவும், திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி கே.என்.நேரு, வரவேற்புக் குழுவின் தலைவராகவும் கழகத்தின் சார்பில் றிவிக்கப்பட்டுள்ளது.

காலம் முழுதும் கழகமும், நானும் மறக்க முடியாத திருச்சி தந்த திராவிடத்துத் தீரர் அன்பில் அவர் களின் பெயர் ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு விட்ட காரணத்தால், நடைபெறவுள்ள பத்தாவது மாநில மாநாட்டின் பந்தலுக்கு, திருச்சி மாவட்டத் திற்கு அருகே உள்ள சேலம் மாவட்டத்தில் கழகம் வளர்த்த "சேலத்துச் சிங்கம்" என் அருமைத் தம்பி, வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் பெயர் சூட்டப்பட்டுள் ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் அருமை மகன்கள் ராஜாவும், பிரபுவும் மற்றும் அந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சிவலிங்கம், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கழக உடன்பிறப்புகளும் என்னைச் சந்தித்து அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். இளம் வயதிலேயே கரூர் மாவட்டக் கழகச் செயலாளராகி, மகளிரால் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பையும் திறம்பட வகிக்க முடியுமென்பதை எடுத்துக்காட்டிய வீராங்கனை, அற்புதமாகப் பணியாற்றி, சாலை விபத்து ஒன்றில் சிக்கி மறைந்த சகோதரி வாசுகி முருகேசனின் பெயர் மேடைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்காக மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், குளித்தலை சிவராமன், வாசுகியின் கணவர் முருகேசன், தம்பி ரவிக்குமார் மற்றும் நண்பர்கள் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அதுபோலவே இளம் வயதிலேயே இயக்கப் பணி தொடங்கி, படுகிழமாக ஆன பிறகும் தொய்வில்லா மல் தொடர்பணியாற்றிய மூதாட்டி, குளித்தலை தந்த பெருமாட்டி பொற்செல்வி இளமுருகு பெயரால் அரங்கம் - ஆங்கிலத்திலும், தமிழிலும் அற்புதமாகப் பேசவும், எழுதவும் திறமையை வளர்த்துக் கொண்டு, அண்ணாவின் அன்பைப் பெற்று அவர் அருகிலேயே இருந்து பணியாற்றி, மறைந்த எம்.எஸ்.வெங்கடாசலம் பெயரில் முன் முகப்பு - திருச்சி மாவட்டக் கழகப் பொருளாளராக, மேயராக சிறப்பாகப் பணியாற்றி மறைந்த மா.பாலகிருஷ்ணன் பெயரில் உள் முகப்பு - திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி, கொடியோரால் கொலை செய்யப்பட்ட கழகக் காளை, பூண்டி கே.கலைச்செல்வன் பெயரால் நுழைவு வாயில் - திருச்சியில் கழகம் வளர்த்திட நீண்ட காலம் உழைத்திடுவான் என்று நான் எண்ணி யிருந்த அடலேறு, மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி நேருவின் உடன்பிறப்பு, தம்பி கே.என். ராமஜெயம் பெயரால் கொடி மேடை என்று பெயர்கள் அறிவிக் கப்பட்டு மாநாட்டுப் பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றன. மா.பாலகிருஷ்ணன் அவர்களின் மகன் பரணிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் கலைவாணன் ஆகியோரும் நன்றி தெரிவித்தார்கள்.
இந்த பத்தாவது மாநில மாநாட்டிற்குப் பிறகு, நாம் இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்திக்க விருக்கிறோம். முதல் மாநில மாநாட்டிலேயே பொதுத் தேர்தலில் கலந்து கொள்வது என்றும்; பிறகு மதுரை பொதுக்குழுவில் நீண்ட நேரம் விவாதித்து, 1952இல் நடைபெறும் பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் தன் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்றும்; கம்யூனிஸ்டுகளையும், கழகத்தின் ஆதரவுகோரி தலைமை நிலையத்திற்கு வேட்பு மனுக்களை அனுப்பி, தி.மு.க. குறிப்பிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பொதுச் செயலாளரின் அங்கீகாரம் பெற்றவர்களை மட்டுமே ஆதரிப்பது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
1951 டிசம்பர் 13ஆம் நாள் சென்னையில் நடை பெற்ற முதல் மாநில மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக சென்னை அறிவகத்திலிருந்து மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு, பந்தலை அடைந்தது. கழகப் பொதுச் செயலாளர், மாநாட்டுத் தலைவர் அண்ணா கழகத் தின் இரு வண்ணக் கொடியை ஏற்றி வைத்தார். மறுநாள் கே.கே. நீலமேகம் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய பிறகு, மாநாட்டை தலைமை யேற்று நடத்தித் தருமாறு அண்ணா அவர்களை என்.வி.நடராசன் முன்மொழிந்தார். அதனை வழிமொழிந்து பேசுபவர் பட்டியலில் நாவலர், ஈ.வி.கே. சம்பத், சி.பி.சிற்றரசு, டாக்டர் தர்மாம்பாள், கே.ஏ. மதியழகன், தில்லை வில்லாளன், பராங்குசம், சத்தியவாணி முத்து, அன்பில் தர்மலிங்கம், எம்.எஸ். சிவசாமி, பழனிச்சாமி, எஸ்.ஏ. ராசமாணிக்கம், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, முல்லை வடிவேலு, நாஞ்சிலார், சி.வி.எம். அண்ணாமலை ஆகியோர் பெயர்களும், என் பெயரும் இருந்தன.

அண்ணா அவர்களை வழிமொழிந்து நான் அப்போது பேசியது –
"வாழ்வு மூன்று எழுத்து; வாழ்விற்குத் தேவையான பண்பு மூன்று எழுத்து; பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து; அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து; காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து; வீரர் செல்லும் களம் மூன்று எழுத்து; களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து; அந்த வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் "அண்ணா" மூன்று எழுத்து, அந்த அண்ணனைத் தலைமையேற்க வழிமொழிகிறேன்"
ஆண்டுகளுக்கு முன்பு என் அண்ணனைத் தலைமையேற்க நான் வழிமொழிந்து பேசியதை நானும் மறக்கவில்லை; என்னை அறிந்த எவரும் மறக்கவில்லை! ஆனால் அந்த என் அண்ணன், என்னை இந்தக் கழகத்திற்குத் தலைமையேற்க, சொல்லாமல் சொல்லிக் கட்டளை வழங்கிவிட்டு, மறைந்து 43 ஆண்டுகளாகிவிட்டன! இல்லை யில்லை; அவர் மறையவும் இல்லை; அவர் மறைந்த தாக நாம் நினைக்கவும் இல்லை; நம் சொல்லில், செயலில், உயிர்த் துடிப்பில் கலந்து வருகிறார்!

அந்த முதல் மாநாட்டில் உரையாற்றியபோதுதான் அண்ணா "நமது இலட்சியத்தை நோக்கி, அமைதிப் பாதையிலே நடந்து செல்கின்றோம். அந்தப் பயணத் தின் இடையிலே வரும் பிரச்சினைகள், பாதையிலே வரும் நண்பர்களைப் போல; பேசிக் கொண்டே செல்வோம், பிரிவோம் - ஆனால் பாதையை விட மாட்டோம், மழை பெய்தால் ஒதுங்கி நிற்போம், சிறிது நேரம் - ஓய்ந்து விடமாட்டோம். தொடர்ந்து நடப்போம். பனி, மழை, வெய்யில், குளிர், இரவு, பகல் என்ற எதுவும் பயணத்தை நிறுத்தாது - பாதையை மாற்றாது. பாதையில் பிணங்கள் கிடக்கலாம். எலும்புக் கூடுகள் இருக்கக்கூடும். அவைகளைச் சுற்றி கழுகுகள் வட்டமிடலாம். நரிகளின் ஊளை கேட்கலாம். ஆனால் நாம் பாதையைத் தவறவிடோம். பிணமும், பிறவும் நமக்கு முன்னால் வீரர்கள் சென் றிருக்கிறார்கள் என்பதின் சின்னங்கள் என்றே கருதி நடப்போம். இடையிலே வரும் பிரச்சினைகளுக்காக நாம் எதற்காக உருவாகி, உழைத்து வருகின்றோமோ அந்த அடிப்படை இலட்சியத்தை இழந்துவிட மாட்டோம்"" என்றெல்லாம் நமக்கு பாடம் நடத்தினார்.
1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களை நான் வழிமொழிந்தேன். 1956ஆம் ஆண்டு மே திங்கள் 17, 18, 19, 20 ஆகிய நாட்களில் இதே திருச்சி மாநகரில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில், மாநாட்டுத் தலைவராக நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை வழிமொழிந்து அண்ணா அவர்களே பேசினார். ஆம்; வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த வார்த்தைகளை யார்தான் மறப்பார்கள்? "தம்பீ, வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்! வா!" - இதுதான் அண்ணா அவர்கள், நாவலரை வழிமொழிந்து பேசிய வைர வரிகளாகும். ஆனால் அதற்குப் பிறகு, அந்தப் பேச்சுக்கான விளக்கத்தை மாநாட்டு இறுதி உரையில், அண்ணா தந்தார். "எனக்குத் தம்பியாக இருந்தாலும், நாமெல்லாம் பார்த்து ஒருவரைப் பொதுச் செயலாளராக ஆக்கி விட்டு, பிறகு அவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், அந்தத் தலைமையை மதிப்பதும்தான், கட்சிக் கட்டுப்பாட்டை வளர்க்கும். அப்படி தலைமைக்கு மதிப்பளித்து நடக்கும் பழக்கத்தை நான் என் அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கிறேன்"" என்று அண்ணா அவர்கள் "கட்டுப்பாடு" என்பதற்கு விளக்கமளித்துப் பேசினார்கள். இப்படியெல்லாம் "கட்டுப்பாடு" பற்றி நமக்குப் போதித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு நம்மை இலட்சியப் பயணத்தில் வழி நடத்திய மாநாடுகள், பொதுக் குழுக்கள், செயற் குழுக்கள்தான் எத்தனை எத்தனை? இன்றைக்கு அவர் இல்லை, ஆனால் அவர் உருவாக்கிய நமது உயிர் மூச்சான கழகம் இருக்கிறது. ஆல் போல் தழைத்து ஆகாயமளவுக்கு உயர்ந்து நிற்கின்றது. அந்தக் கழகத்தின் பத்தாவது மாநில மாநாடுதான் திருச்சியில் பாங்குற நடைபெறவுள்ளது. மாநாடு பற்றி இன்றைய (4-1-2014) "தினமணி" நாளேட்டில் பந்தல் பணி நடைபெறுகின்ற புகைப்படத்தோடு பெரிதாகச் செய்தி வெளிவந்துள்ளது. திண்டுக்கல் சாலையில் தீரன்நகர் பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மாநாட்டுப் பந்தல் அமைவதாகவும், மழை பெய்தாலும் மாநாடு தடைபடாத வகையில் தகரக் கூரைகளால் பந்தல் அமைக்கப்படுவதாகவும், இந்த மாத இறுதிக்குள் பந்தல் அமைக்கும் பணி நிறை வடையும் என்றும், மாநாட்டுப் பகுதியில் 20 இடங்களில் "போர்வெல்" அமைக்கும் பணி தொடங்கப் பட்டிருப்பதாகவும், சுவர் விளம்பரப் பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரவேற்புக் குழுத் தலைவர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார். கழகத்திலே இரண்டறக் கலந்து காலமெல்லாம் பணியாற்றும் உன்னைப் போன்ற உடன்பிறப்பு களில் ஒருசிலர்தான் இந்த பத்து மாநில மாநாடு களிலும் கலந்து கொண்டவர்களாக இருப்பீர்கள்!

முதல் மாநில மாநாட்டிலும், இரண்டாவது மாநில நாட்டிலும் கலந்து கொண்டவர்கள் ஒருசிலர் தான் இருப்பீர்கள். பத்தாவது மாநில மாநாட்டைத் தவற விடலாமா? ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதற்காக, காரிலேயே புறப்பட்டு வந்த வரவேற்புக் குழுத் தலைவர் தம்பி கே.என்.நேரு இரவு 8.30 மணியளவில் எனக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, அன்றிரவே காரிலேயே திருச்சிக்குப் புறப்பட்டார். இந்த இரவிலா பயணம்? என்ற போது, காலையிலே வேலை இருக்கிற தண்ணா என்று பாசத்தோடு கெஞ்சி விட்டுச் சென்றார். அவர் சென்றுவிட்டார், ஆனால் அவர் பத்திரமாக ஊர் சென்று திரும்ப வேண்டுமே என்று நான் வலைப்பட்டேன். உடன்பிறப்புகள் மீது இவ்வாறு நான் கொண்ட பாசம்தானே, இத்தனை வயதிலும் கழகம், கழகம், கழகம் என்று கவலைப்பட வைக்கிறது. என்னுடைய கவலை இருக்கட்டும்; இதோ ஜனவரி பிறந்து விட்டது; அடுத்த வாரம் பொங்கல்; பின்னர் பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில் நம் அண்ணனின் நினைவு நாள்; இப்படியே நாட்கள் ஓடி விடும். பயணம் புறப்படு; பத்திரமாக வந்திடு; உன் வரவுக்காக என் விழிகள் காத்திருக்கும்!

No comments:

Post a Comment


Labels