அரசுப் பேருந்தா? அதிமுக பேருந்தா? சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக திமுக குற்றச்சாட்டு!
சட்டசபையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து ஒரு பிரச்சனையை எழுப்பி அதுகுறித்து பேச அனுமதி கேட்டார். அதுகுறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.
உடனே தி.மு.க. உறுப்னிர்கள் அனைவரும் எழுந்து புதிய மினி பஸ் படங்களை எடுத்துக்காட்டி கோஷம் எழுப்பினார்கள். உடனே சபாநாயகர் எனது அனுமதி இல்லாமல் சபைக்கு படங்கள் கொண்டு வந்து காட்டியது இது சபைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றார்.
தொடர்ந்து தி.மு.க. வினர் அதுகுறித்து பேச அனுமதிக்கும்படி வற்புறுத்தினார்கள்.
உடனே சபாநாயகர் சபைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் தி.மு.க.வினர் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இதையடுத்து தி.மு.க.வினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அப்போது கோஷம் எழுப்பியபடியே வெளியேறினார்கள்.
சபையை விட்டு வெளியே வந்ததும் சட்டசபை வளாகத்தில் கையில் இருந்த புகைப்படங்களை தூக்கி பிடித்தப்படி ‘‘அரசு பேருந்தா? அ.தி.மு.க. பேருந்தா? அரசு போக்குவரத்து கழகமா? என்று கோஷமிட்டனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது::–
சமீபத்தில் முதல்– அமைச்சர் தொடங்கி வைத்த மினி பேருந்துகளில் அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து சபையில் பேச அனுமதி கேட்டோம். இதுபற்றி விபரமாக பேசவும் திட்டமிட்டு இருந்தோம். சபாநாயகர் அனுமதி தராததால் எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். அதனால் எங்களை சபையில் இருந்து வெளியேற்றி விட்டனர்.
அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகங்களில் இதுபோன்ற கட்சி சின்னங்களை பதிப்பதும், குடிநீர் பாட்டில்களில் பதிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment