வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



02/11/2016

நவ 20-ல் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் 
எண்ணிக்கை 92 ஆக உயர்ந்திருக்கும்: ஸ்டாலின்  பேச்சு

திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (02-11-2016) தருமபுரி மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி அவர்களின் இல்லத் திருமண விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி  மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

’’அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணமக்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே நடைபெற்று முடிந்திருக்கின்ற திருமணம் சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை திருமணமாக நடந்தேறி இருக்கிறது. பெருமையோடு சொல்லப்போனால் இது தமிழ் திருமணம். தமிழகத்திலே இருக்கக்கூடிய சில பிரச்சினைகள் எல்லாம் அண்ணன் துரைமுருகன் அவர்களும் மற்றவர்களும் மிகுந்த வேதனையுடன் உங்களிடத்திலே எடுத்துச் சொன்னார்கள். குறிப்பாக தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 5 ஆண்டுகள் இருந்த ஆட்சி தான். நாங்கள் ஏதோ கடந்த 5 மாதங்களாக ஆளுகின்ற ஆட்சியை செயல்படாத ஆட்சி என்று சொல்லவில்லை, இது கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாத ஆட்சிதான். அந்த 5 வருடமும் வீடியோ கான்பரன்சிங்கில்தான் ஆட்சியை நடத்தினார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்வார்கள், ஆட்சி அல்ல காட்சி நடக்கிறது, அதுவும் காணொளி காட்சிதான் என்று தொடர்ந்து எடுத்துச் சொன்னோம். ஆனால் இன்றைக்கு அப்போல்லோவில்தான் எல்லாம் நடக்கிறது. வரக்கூடியவர்கள் உள்ளே செல்கிறார்கள், மருத்துவர்களை சந்திக்கிறார்கள், அமைச்சர்களை சந்திக்கிறார்கள் சந்தித்துவிட்டு வெளியே வந்து பேட்டி தருகிறார்கள். அதை இன்றைக்கு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அண்ணன் துரைமுருகன் அழுத்தம் திருத்தமாக சொன்னார், ”முதலமைச்சர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் நலம்பெற்று வர வேண்டும் என முதன்முதலில் அறிக்கையை வெளியிட்டவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்”, என்று குறிப்பிட்டார். என்னதான் அரசியலில் கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருந்தாலும் ஏன், இதே அதிமுகவில் அன்றைக்கு தலைவராக, முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டபோது, ”நாற்பதாண்டு கால நண்பர் நலமோடு வரவேண்டும் என விரும்புகிறேன்”, என சொன்னவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இதுதான் நமது ஜனநாயகம், நம்முடைய அரசியல் பண்பாடு.

ஆனால் அரசியலில் கொள்கையிலே லட்சியத்திலே மாறுபாடுகள் இருக்கலாம் அதுவேறு. இன்றைக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? எந்த பணிகளும் நடக்கவில்லை என்பது பற்றி ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், ஏதோ ஒன்றிரண்டு பத்திரிக்கைகள் அது பற்றிய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் இன்றைக்கு பல பத்திரிக்கைகள், ஊடகங்கள் அந்த செய்திகளை எல்லாம் மூடி மறைத்து தவறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? அது அவர்களுடைய சுய லாபம். நான் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

சிந்தித்துப் பாருங்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு தொழில்துறையிலே தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கின்றது என்பதை பற்றி மத்தியில் இருக்கக்கூடிய தொழில் கொள்கை மேம்பாட்டு துறையின் சார்பில் ஒரு கருத்துக்கணிப்பு ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள். 36 மாநிலங்களில் இன்றைக்கு தமிழ்நாடு 18வது இடத்தில் இருக்கின்றது. ஏற்கனவே தொழில்துறையில் 2 வது, 3 வது இடத்திலே இருந்த தமிழ்நாடு, திமுக ஆட்சியிலே முதலிடம் பிறகு இரண்டாமிடத்திற்கு கூட வந்திருக்கின்றது. நான் மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு 18வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது என வேதனையோடு குறிப்பிட்டு இருக்கிறார்கள். எந்தவித செயல்பாடும் இல்லை.

நான் கேட்க விரும்புவது, தேர்தலுக்கு முன்னால் இவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள், ஆட்சி முடிவடையக் கூடிய நேரத்திலே முதலமைச்சராக இருக்கக்கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலே உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்று தொழில்துறைக்காக நடத்தினார்கள். நியாயமாக ஆட்சிக்கு வந்து அடுத்த வருஷமோ அல்லது இரண்டாவது வருடமோ நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்து கடைசி வருஷத்திலே முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். உலக முதலீட்டாளர்கள் எல்லாம் அதில் பங்கேற்பார்கள் எனச் சொன்னார்கள். அதில் யார் யாரெல்லாம் பங்கேற்றார்கள் என்பதைப் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அந்த மாநாட்டை நடத்தியதற்கான செலவு. அதையும் தாண்டி கூட செலவாகியிருக்கிறது.

இரண்டு நாள் மாநாட்டை தொடங்கி வைத்து முடித்து வைத்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். முடித்து வைத்தபோது முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சில செய்திகளை சொன்னார். ”இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஏறக்குறைய 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றது. புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றது”, என புதிய கணக்கு சொன்னார். அந்த புரிந்துணர்வு ஒப்பந்த கணக்குகள் மட்டுமல்ல, முதலீடு எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒரு கணக்கு போட்டார். 2 இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது என கணக்கு போட்டார்கள். 2.42 என்பதை நீங்கள் கணக்கு போட்டுப் பாருங்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் 24 ஆம் தேதி 2 வது மாதம். 2 க்கும் 4 க்கும் இடையில் ஒரு புள்ளி வைத்து வெளியிட்டார்கள். இது நான் இப்போது இல்லை, அந்த அம்மையார் அறிவித்த அடுத்த நாளே, இந்த கணக்கை வைத்துதான் அந்தக் கணக்கு போட்டிருக்கிறார்கள் என செய்தியை நான் வெளியிட்டேன். எந்தப் பத்திரிக்கையும் அதை வெளியிடவில்லை. இப்போதாவது வெளியிடுவார்களா என தெரியவில்லை.

மக்களை ஏமாற்றுவதற்காக அந்தக் கணக்கை வெளியிட்டார்கள். 2.42 இலட்சம் ரூபாய் முதலீடு வந்திருக்கிறது என சொன்னீர்களே, நான் கேட்கிறேன், முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து, தேர்தல் முடிந்து 5 மாதம் ஆகியிருக்கின்றது. எங்காவது ஒரு தொழிற்சாலை தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறதா? அதற்கான முயற்சியாவது இந்த அரசு எடுத்திருக்கிறதா? 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது என சொன்னீர்களே, எதையாவது ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்த அரசு செயல்பட்டிருக்கிறதா? என்று கேட்க விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல. 110 என வெற்று அறிக்கையை ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா சட்டப்பேரவையில் உட்கார்ந்து கொண்டு, 110 அறிக்கையை படித்துவிட்டு 100 கோடி 1000 கோடி 2000 கோடி என அறிவிப்பு எல்லாம் வெளியிட்டார். அப்பொழுது கூட அண்ணன் துரைமுருகன் சட்டப்பேரவையில் எழுந்து நின்று, ”இந்த திட்டங்கள் எல்லாம் வந்தால் மகிழ்ச்சி தான், ஆனால் இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது”, எனக் கேட்டார். அதற்கு பதில் இல்லை. பதில் என்பதை விட பேசவே விடவில்லை. இப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் இருக்கின்றது.

அதுமட்டுமா, காவிரி பிரச்சினையில் இன்றைய நிலை, தமிழகத்தில் குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. அண்டை மாநிலமாக இருக்கக்கூடிய கர்நாடக மாநிலம் அங்கிருக்க கூடிய மாற்றுக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, வரவழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுகிறார்கள். விரோதியாக இருக்கக்கூடிய கட்சியைக் கூட கூப்பிடுகிறார்கள். அரசியலைப் பார்க்கவில்லை, அவர்கள். மாநிலத்தின் உரிமையை பார்க்கிறார்கள். அதற்குப் பிறகு சட்டமன்றத்தை கூட்டி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த நிலை கர்நாடக மாநிலத்தில் நடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நிலை இருக்கிறதா?
தலைவர் கலைஞர் மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளும் சொல்கிறார்கள், இதுவரைக்கும் கூட்டத்தை கூட்டினார்களா? கடந்த 5 வருடமாக இருந்தாலும் சரி, இப்பொழுது இருக்கின்ற 5 மாதமாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாத ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஜெயலலிதா தலைமையில் இருக்கின்ற அதிமுக ஆட்சிதான்.

ஆனால் தலைவர் கலைஞர் இதே தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஒரு பொதுவான பிரச்சினையாக வந்துவிட்டால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவார், சட்டமன்றத்தில் விவாதிப்பார் அவர்களுடைய கருத்துகளை கேட்ட பிறகு முடிவெடுப்பார் இது கலைஞருடைய வரலாறு, திமுகவுடைய வரலாறு. ஆனால் இன்றைக்கு அந்த நிலை இல்லை.

காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள், சட்டமன்றத்தை கூட்டுங்கள் என எல்லாக் கட்சிகளும் கேட்டும், அவர்கள் கூட்டாத காரணத்தினால் எதிர்க்கட்சியாக இருக்கின்ற திமுக கூட்டிட வேண்டும் என எல்லோரும் சொன்ன காரணத்தால், நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கடந்த 25 ஆம் தேதி கூட்டினோம். அந்த கூட்டத்திற்கு எல்லோரும் வந்தார்களா? ஒரு சிலர் வரவில்லை. அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறதா? நடந்து முடிந்த தேர்தலில் டெபாசிட் வாங்கினார்களா என்பது பற்றி கூட நான் கவலைப்படவில்லை. அந்தக் கட்சியினுடைய தலைவராவது ஜெயித்தார்களா? தேர்தலில் நின்று பிறகு வாபஸ் வாங்கிய கதையெல்லாம் உண்டு. நாம் பெரிய கட்சி, சின்ன கட்சி என்று கருதினோமா?. அதிமுகவில் இருந்து எல்லாக் கட்சி தலைவர்களுக்கும் நாம் அழைப்பு அனுப்பினோம். ஆளுங்கட்சி கூட்ட தவறிவிட்டது. அதனால் எதிர்கட்சியான திமுக கூட்டியது. 89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி திமுக.

இன்னும் சொல்லப்போனால், ஆளுங்கட்சியான அதிமுக பெற்ற வாக்கு என்ன தெரியுமா? 1 கோடியே 75 இலட்சம், திமுக பெற்ற வாக்குகள் 1 கோடியே 71 இலட்சம். வித்தியாசம் வெறும் நாலே முக்கால் இலட்சம்தான். ஆக 1 கோடியே 75 இலட்சம் வாக்குகளைப் பெற்ற அதிமுக கூட்டாத காரணத்தால் 1 கோடியே 71 இலட்சம் வாக்குகளைப் பெற்ற திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதெயெல்லாம் எடுத்துச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், இன்றைக்கு தமிழகத்திலே ஒரு ஆட்சி இருக்கிறது, இருக்கிறது என்பதை விட படுத்திருக்கிறது. நான் வேறெதையோ மனதில் வைத்து விமர்சனம் செய்யவில்லை. செயல்பட முடியாமல் இருக்கிறது. எனவே செயல்பட முடியாமல் இருக்கின்ற இந்த ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று சொன்னால், 3 இடைத்தேர்தலை இன்றைக்கு நாம் சந்திக்க இருக்கின்றோம். 89 உறுப்பினர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள் 20 ஆம் தேதிக்குப் பிறகு பாருங்கள், 89 + 3 = 92 இடங்களில் நாம் அங்கே அமரப்போகிறோம். அந்த நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

மக்களிடத்திலே அந்த மாற்றத்தைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த தமிழகம் சிறப்போடு வாழ, மக்கள் முன்னேற்றத்தை காணவேண்டும் என்றால், ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் உங்களுக்காக பாடுபடக் கூடிய தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் பீடு நடை போடக் கூடிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அந்த உறுதியேற்க வேண்டும் எனக் கேட்டு, மணக்கோலம் பூண்டிருக்கின்ற மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். ’’

No comments:

Post a Comment


Labels