மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில்
மு.க.ஸ்டாலின் ஆய்வு( படங்கள் )
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் கொளத்தூர் சென்று மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
வார்டு-69ல் உள்ள ரமணா நகரில் கபிலர் தெரு மற்றும் ராஜா தெரு சந்திப்பில் சாலைகளில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் - வார்டு-64ல் உள்ள பத்மா நகர் பகுதியிலும் மற்றும் பாடசாலை தெருவிலும், வார்டு- 65ல் பாரதி ராஜீவ்காந்தி நகரிலும் மற்றும் செந்தில் நகரிலும் - ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ள நீரையும் பார்வையிட்டு, அப்பகுதி மக்களை சந்தித்து, அவர்களது இன்னல்களை கேட்டு, ஆறுதல் கூறி, வெள்ள நீரை அகற்றிட உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
சென்னை மாநகராட்சி எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைநீர் வடிகால் தூர் வாரும் பணிகளையும் சரிவரச் செய்யவில்லை. மழை பெய்த பின்னர், நிவாரணப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் மாநகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக்கூறி நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டு மென்பதற்காக அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு தன்னுடன் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளையும் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று, மண்டல அலுவலரிடம் கொளத்தூர் தொகுதி மழை வெள்ள நீரால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக எடுத்துக் கூறினார். இன்று இரவுக்குள் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், மோட்டார்களை வைத்து மழை நீரை அகற்றிட வேண்டும். அதற்கான மோட்டார்கள் அமைத்திட வசதி இல்லையென்றால், அதற்கான வாடகை கட்டணைத்தை நான் தரத் தயராக இருக்கிறேன் என்றும் சொன்னார். நாளை காலைக்குள் மழை நீரை அகற்றாவிட்டால், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அந்ததந்த பகுதி மக்களை திரட்டி, நானே அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் நடத்திடுவேன் என்றும் சுட்டிக்காட்டினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தளபதி மு.க.ஸ்டாலின் “கடந்த மூன்று நாட்களாக பெய்துள்ள மழையினால் மரங்கள் சாய்ந்துள்ளன. சாலைகள் சேதமடைந்துள்ளன. மழைநீர் வெள்ளம்போல் தேங்கிக் கிடக்கின்றது. மின்சார தடை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நிவாரணப் பணிகளை எதையும் மேற்கொள்ளவில்லை.
மழை நீருடன் கழிவுநீர் கலந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டி, இவற்றை மறைப்பதிலேயே அரசு குறியாக இருக்கிறது. உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொளத்தூரில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நாளை காலைக்குள் மழை நீரை அகற்றாவிடில், சாலை மறியல் நடத்தப்படும்” என்று கூறினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தளபதி மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட போது, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் புரசை ப.ரங்கநாதன், தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் இரா.கிரிராஜன், பகுதிச் செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன் மற்றும் நாகராஜன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் தேவஜவஹர் மற்றும் வட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment