சென்னை,
தி.மு.க – இஸ்லாமியர்கள் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஏ.சேக் முகமது அலி, நெல்லை முபாரக் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க-இஸ்லாமியர்கள் உறவு
தி.மு.க. சிறுபான்மையினருக்கு தொடர்ந்து பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. வெற்றி பெற்றாலும், தோற்றாலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் என எப்போதும் தி.மு.க.விற்கு துணை நிற்பவர்கள் இஸ்லாமியர்கள். தி.மு.க. மற்றும் இஸ்லாமியர்கள் இடையேயான நட்புறவை யாராலும் பிரித்துவிடமுடியாது.
கருணாநிதி தன் ஆட்சி காலத்தில் இடஒதுக்கீடு உள்பட எண்ணற்ற நலத்திட்டங்களை சிறுபான்மையினருக்கு நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். தேர்தல் நெருங்குகிற நேரத்தில் கூட்டணி அமைக்க இந்த கூட்டம் நடத்தப்படுகிறதா? என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கேட்டார்.
தியாகம்
அதில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த கூட்டம் அதற்காகத்தான் நடத்தப்படுகிறது. நானும் அந்த முடிவோடுதான் வந்திருக்கிறேன். தமிழகத்தில் நடைபெறும் அக்கிரம ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
இதே போன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சமூக நீதி இயக்கத்தை சேர்ந்த பேராயர் ராஜா சிங், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிக்கோ இருதயராஜ், கவிக்கோ அப்துல் ரகுமான், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகமது ஹனிபா உள்பட ஏராளமானோர் பேசினர்.
முடிவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் எஸ்.அமீர் ஹம்சா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment