சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அப்பீல்!!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கடந்த மே 11-ந் தேதியன்று கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் இன்று ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மற்றும் 7 பினாமி நிறுவனங்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து இம்மனுவை அன்பழகன் தாக்கல் செய்துள்ளார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற காரணமாக இருந்தவர் க. அன்பழகன். இவரையும் இந்த வழக்கில் ஒருதரப்பாக சேர்த்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதித்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment