வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



23/07/2015

கலைஞர்மீது கல்லெறிவது ஏன்?
 
2016 ஆட்சிக்குவரும் போது பூரண மது விலக்கினை அமல்படுத்துவோம் என்று தி.மு.க.  தலைவர் அவர்கள் அறிவிப்பு ஒன்றினைச் செய்தார் (முரசொலி 21.7.2015).
முதன் முதலாக அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டவர் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களே ஆவார்கள். அதனைத் தொடர்ந்து, இந்தக் கால கட்டத்தில் பூரண மது விலக்குக் கொள்கையில்  உளப்பூர்வமான அக்கறை கொண்ட தலைவர்கள் அனைவரும் வரவேற்று அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டில் அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருமான ஒரு தலைவர் ஒரு பிரச்சினைமீது தேவையான கருத்துச் சொல்லுகிறார் என்கிறபோது சம்பந்தப்பட்ட பிரச்சினைமீது உண்மை யான அக்கறை செலுத்துபவர்கள் மனந்திறந்து வரவேற்கவே செய்வார்கள்.
அவ்வாறே இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முசுலிம் லீக், ம.தி.மு.க., மனிதநேயக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் நாடு விவசாய தொழிலாளர் கட்சி போன்ற கட்சிகளின் தலைவர்கள் கலைஞர் அவர்களின் நிலைப்பாட்டை வரவேற்று  அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அதே நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையொப்பமே மது விலக்குக்  கோப்பில்தான் கையொப்பம் போடுவோம் என்று சொல்லுபவர்களும், சில தனி மனிதர்களும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் நிலைப்பாட்டுக்கு உள் நோக்கம் கற்பித்து கருத்துக் கூறியிருப்பது - பெரிதும் வருந்தத்தக்கது மட்டுமல்ல - கண்டிக்கத்தக்கதுமாகும்.
தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரான திரு பீட்டர் அல்போன்ஸ் கூறும்போது மதுவிலக்குக் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கருத்துக் கூறியது - இப்பிரச்சினையில் ஓர் உயிரோட் டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மிக நன்றாகவே கருத்துக் கூறியுள்ளார்.
சில மேதாவிகள் சொல்லுகிறார்கள்: அவர்தானே மதுக் கடைகளைத் திறந்தார் அன்று; என்று; அப்படி திறந்த வரே இப்பொழுது மூடச் சொல்லுகிறார் என்கிறபோது இந் நிலைப்பாட்டை ஆதரிப்பது தானே - வரவேற்பதுதானே புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு அதற்கு உள் நோக் கம் கற்பிப்பது எந்த வகையில் அறிவுடைமையானது? எந்த வகையில் சம்பந்தப்பட்ட மது விலக்குப் பிரச் சினையில் உள்ளபடியே அக்கறை உடைமையாகும்?
பூரண மதுவிலக்குத் தேவை என்ற எண்ணம் அந்தரங்க சுத்தியானது என்றால் இந்தக் கொள்கைக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் இரு கரம் கூப்பி, கைலாகு கொடுத்து வரவேற்றிருக்க வேண்டுமே! அதை விட்டு விட்டு இதிலும் அரசியல் நடத்துவது ஒரு வகை சுயநல குயுக்தி என்பதில் அய்யமே இல்லை.
மது விலக்குக் கொள்கை என்பது எந்த ஒரு கட்சிக்கும், தலைவருக்கும் காப்பு உரிமையோ உடைமையோ உள்ளதல்ல; அது ஒரு பொதுப் பிரச்சினை.
நான்கு வயது குழந்தைக்குக்கூட மது கொடுத்து வேடிக்கை பார்ப்பது, கல்லூரியில் படிக்கும் மாணவிகூட மது குடித்து சாலைகளில் ரவுடிசம் செய்வது, உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவனே குடித்து விட்டுக் கல்விக் கூடத்துக்கு வருவது என்கிற அளவுக்கு குடி முற்றி விட்ட ஒரு சூழ்நிலையில் (தமிழ்நாட்டில் மது அருந்து பவர்களில் சராசரி வயது பதின் மூன்றாம்) சமூக அக் கறையோடு இந்தப் பிரச்சினையை அணுகி, நல்ல முடிவை எடுப்பதுதான் மக்கள் தலைவர்களுக்கான மகத்தான மகுடமும், தகுதியும் ஆகும். அந்தத் தனித் தகுதி தனக்கு உண்டு என்பதை முத்தமிழ் அறிஞர் அவர்கள் நிரூபித்துக் கொண்டுள்ளார்.
தனிப்பட்ட அரசியலுக்காக சிலர் இந்தப் பிரச் சினையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருப்ப வர்கள், தம் கை முதல் பறி போய் விட்டதே எனும் சுயநல நோயின் அழுத்தம் காரணமாக தடுமாறி கலைஞர் அவர்கள்மீது கவண் கொண்டு வீசுவது புரிகிறது - மக்கள்தான் இவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கை மூலம், குடி ஒழிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே கருதுகிற தமிழ்க் குடிமக்கள் உண்மையிலேயே மது விலக்கு வேண்டும் என்று அக்கறை உள்ளவர்கள் யார்? இந்தப் பிரச்சினையை அப்பட்டமான அரசியலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவோர் யார்? என்பதை எளிதாகவே புரிந்து கொண்டு விடுவார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியிலே அவர்களே தங்களுக்குத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்பவர்கள் ஆகி விடு வார்கள் என்பது மட்டும் அப்பட்டமான உண்மையாகும்.
குடியால் குடிகள் அழிந்து கொண்டு இருப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது! இடது சாரிகள் இதில் இன்னும் மனந்திறந்து வரவேற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.
முதல் அமைச்சராகவிருந்த ராஜாஜி அவர்களை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்த போதிலும் ராஜாஜி அவர்கள் ரேஷன் முறையை நீக்கி ஆணை பிறப்பித்த போது, அதனை வரவேற்க சிறிதும் தயங்கவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது பொருத்தமானதே!
திமுக தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் பூரண மது விலக்குக் கொள்கை தொடர்பாக, தவறான வகையில்  அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டிருந்தால், சம்பந்தப் பட்டவர்கள் தங்கள் தவறினைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே அரசியல் கட்சியில்லாத சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் பொது நிலைக் கண்ணோட் டத்தில் திறந்த மனத்தோடு கேட்டுக் கொள்கிறது..

No comments:

Post a Comment


Labels