வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



25/02/2013

சேது சமுத்திர திட்டத்தை
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்!
கலைஞர் அறிக்கை!

தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேது சமுத்திர திட்டம்
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்ததும், சேது சமுத்திரத் திட்டம் பற்றிய சாத்தியக் கூற்றினை ஆராய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேது சமுத்திரக் கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம் மற்றும் அதற்கான விவரங்கள் பா.ஜ.க. பிரதமரான வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு ஆறாவது எண் பாதை (ஆடம்ஸ் பாலம் அதாவது பா.ஜ.க. தற்போது ஏற்க முடியாது என்று கூறுகின்ற ராமர் பாலம்) முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் எந்த பாதையில் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டதை மறந்து இன்றைக்கு அது ராமர் பாலம் உள்ள இடம் என்றும், அங்கே திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்றும் பா.ஜ.க.வினர் தற்போது கூறுவது எத்தகைய முரண்பாடு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
மன்னார் வளைகுடா
சேதுதிட்டம் நிறைவேற்றப்படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச்செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத்துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக்கால்வாய் திட்டத்தின்கீழ் மீன்பிடித்துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும்; மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்;
இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்தியச்சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்; நாட்டின் கடலோர பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத்திரத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8 கோடி மனித நாள் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்; ராமேஸ்வரம், மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதன் வாயிலாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிட்டும்; சேது சமுத்திரக்கால்வாயை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் சுமார் 424 மைல் அளவுக்கு குறையும்.
எரிபொருள் சேமிப்பு
இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது. கணிசமான எரிபொருள் சேமிப்பும், அன்னியச்செலாவணி சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகை கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும். பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளை கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்கு பெட்டக போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்பு துறைமுகமாக மேம்படுத்தப்படும்;

தூத்துக்குடி துறைமுகமாக பெருமளவில் வளர்ச்சி அடையும்; கடற்படை மற்றும் கடலோரப்படை கப்பல்கள் கிழக்குப்பகுதியில் இருந்து மேற்குப்பகுதிகளுக்கு அதிவிரைவில் செல்ல இயலும். இதன் மூலம் இந்தியப் படைத்திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.
மதுரையில் விழா
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் இத்தகைய ஏராளமான பயன்களை கருத்திலே கொண்டுதான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உருவானபோது அதன் குறைந்தபட்சச்செயல் திட்டத்தில் தி.மு.க.வின் முயற்சியால் சேது சமுத்திரத்திட்டம் இடம் பெற்றது மாத்திரமல்லாமல், ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு, அதன் தொடக்க விழாவிற்கு பிரதமர் மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் சோனியாகாந்தியும், நானும், மற்ற தோழமைக் கட்சித்தலைவர்களும் மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவிலே கலந்து கொண்டோம்.
சேது சமுத்திரத்திட்டத்தின் தொடக்க விழாவை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்போது சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடைபெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெஞ்ச், Òதேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத்திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார்.
பாக் ஜலசந்தி
சேது சமுத்திரத்திட்டம் நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டை சுற்றி வங்காளவிரிகுடா கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும்.

இந்தக் கால்வாய்த்திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு தடை கிடையாதுÕÕ - என்று கூறி தீர்ப்பளித்தது. அவ்வாறு; தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத்திட்டம், அப்போது அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவின் நல்ல முயற்சியின் காரணமாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், மதவாத சக்திகள் எப்படியும் அந்தத்திட்டத்திற்கு முட்டுக்கட்டைகளை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை எடுத்துச்சென்றிருக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் விரைவில் இதுகுறித்து நல்ல முடிவெடுத்து தீர்ப்பளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், நல்ல தீர்ப்பினை பெற்று சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு வழிவகுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment


Labels